வணக்கம். நீண்ட வருடங்களுக்குப் பின் இணையத்தில் இணைகிறேன். கொரோனா அளித்திருக்கும் இடைவெளி? என்னை இணையத்தில் இணைத்திருக்கிறது. உங்களையும் தான்.
என்னைப் போலவே நீங்களும் உங்களுக்கான வலைப்பக்கங்களை உருவாக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆமாம். இணையப் பக்கங்களில் உலா வரும் கோடிக்கணக்கான செய்திகளில் எத்தனை உண்மைகள் உள்ளன என்பதைச் சிந்தித்திருக்கிறீர்களா?
தமிழில் இணையத் தரவுகள் பெருகிவிட்டன. அதே நேரத்தில் தடுமாற்றங்களும் பெருகிவிட்டன. ஒரு தரவைப் பற்றிய தெளிவு கிடைப்பதற்கு மாற்றாகக் குழப்பம் பெருகினால், என்ன நடக்கும்? அரிதின் முயன்று தேடி எடுக்க வேண்டிய நூல்கள் எளிதில் என் வீட்டுக் கணினித் திரையில் கிடைப்பது வரமே!. அதற்குப் பின்னால் எத்தனையோ தமிழ்-கணினி ஆர்வலர்களின் உழைப்பு ஒளிந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த நன்றி! அப்படிக் கிடைப்பது என் சோம்பேறித் தனத்தை, என் மூளையின் வேலைத் திறனைக் குறைத்து விட்டால்? சிந்தியுங்கள் நண்பர்களே!
உலகம் உங்கள் வீட்டிற்குள் வந்திருப்பதால் தேவையற்ற இணைப்புகளில் திசை திரும்பாதீர்கள். ஒன்றைப் பற்றி ஓரகத்தே இரு என்பதை எண்ணுங்கள். தேவைக்கு இணையத்தைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் என்றேனும் ஒருநாள் இணையச் சேவையும் அரசின் பொதுப் பங்கீட்டுத் திட்டத்திற்கு மாற்றப்படக் கூடும்.
கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நேர்மையான புதிய தரமான ஆய்வுகளை முன்னெடுக்க முயற்சி செய்யுங்கள். இன்றேல், கல்வி தடம் புரண்டுவிடக் கூடும்.
கையில் கிடைத்த புதிய பொருளைக் குழந்தை, அடுத்து ஒன்று புதிதாகக் கிடைக்கும் வரை விடுவதில்லை. இப்போது இணையமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அதனை உங்களின் தரமான உள்ளீடுகள் என்ற சேவையால் மேம்படுத்துங்கள். விளையாட்டுப் பொருளாக மாற்றி விட்டீர்கள் என்றால் பயனற்றுப் போகும்.
உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடற்ற தரவுகளைத் தவிருங்கள். இணையமும் இதயமும் இணைந்தால் நாளை நமதாகும். நம் தமிழ் வசமாகும். இணையத்தின் பக்களில் இனி தொடர்ந்து இணைவோம்......
















